3 நாடுகள் சுற்றுப் பயணத்திற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொழில் அதிபர்கள் அழைப்பின் பேரில் முதலீடுகளை ஈர்க்கவே வெளிநாடுகளுக்கு பயணம் மேற்காள்வதாக தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து, அமெரிக்கா, துபாயில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் முதலமைச்சரை அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள், அதிகாரிகள் வழிஅனுப்பி வைத்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, தொழில் அதிபர்கள் அழைப்பின் பேரில் முதலீடுகளை ஈர்க்கவே வெளிநாடுகளுக்கு பயணம் மேற்காள்வதாக தெரிவித்தார்.
தன்னுடைய வெளிநாட்டு பயணத்தை ஸ்டாலின் கொச்சைப் படுத்தி பேசுவதாக சாடிய முதலமைச்சர், தான் ஒன்றும் தொழில் அதிபர் அல்ல என்றும் சாதாரண விவசாயி என்றும் தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தவே வெளிநாடு சுற்றுப்பயணம் என்றும் விளக்கம் அளித்தார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதலமைச்சரின் லண்டன் பயணத்தின் மூலமாக தமிழகத்தில் மருத்துவ சுற்றுலா மேம்படும் என்றார். முதலமைச்சருடன் லண்டன் செல்ல இருக்கும் அவர், 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருப்பதாக கூறினார்.
வரும் 31 ஆம் தேதி முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தில் தானும் இணைய இருப்பதாக கூறிய வருவாய் துறை அமைச்சர் ஆ.பி. உதயகுமார், 7 நாட்கள் அவருடன் பயணிக்க இருப்பதாக தெரிவித்தார்.
சென்னையில் இருந்து துபாய் வழியாக இங்கிலாந்து செல்லும் முதலமைச்சர் பழனிசாமி, 29ம் தேதி சுகாதாரத்துறை தொடர்பாக முதலீட்டாளர்களை சந்தித்து பேச உள்ளார்.
30ம் தேதி கிளாஸ்கோவில் எரிசக்தி துறை முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுக்கிறார்.
செப்டம்பர் 1ம் தேதி லண்டனில் இருந்து அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்கு முதலமச்சர் புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து பப்பலோ நகருக்கு சென்று கால்நடை அபிவிருத்தி தொடர்பாக கருத்துக்களை கேட்டறிகிறார். செப்டம்பர் 4ம் தேதி சான்பிரான்சிஸ்கோ செல்லும் முதலமைச்சர், அங்கு தமிழக தொழில் முனைவோர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
செப்டம்பர் 7ம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து முதலமைச்சர் பழனிசாமி துபாய் செல்ல உள்ளார். செப்டம்பர் 8,9ம் தேதிகளில் துபாயில் தொழில் முனைவோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் செப்டம்பர் 10ம் தேதி சென்னை திரும்ப இருக்கிறார்.
