காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள மும்பை சொகுசு விடுதி முன் தர்ணா செய்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டார். இதே போல் பெங்களூருவில் ஆளுநர் மாளிகை முன் போராட்டம் நடத்திய காங்கிரஸ் மூத்த தலைவர்களை போலீசார் கைது செய்ததால் பதற்றம் நிலவுகிறது.
கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களுடைய ராஜினாமாவை, சபாநாயகர் ரமேஷ் குமார் இன்னும் ஏற்காத நிலையில், எம்.எல்.ஏ.க்களில் 10 பேர் பாஜக ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையின் பவாய் பகுதியில் உள்ள ரினைசேன்ஸ் ((renaissance)) என்ற ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கி உள்ளனர். கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, சிவக்குமார் ஆகியோரால் அச்சுறுத்தல் இருப்பதாகவும் எனவே தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும்
அந்த 10 எம்.எல்.ஏ.க்களும் மும்பை காவல்துறையைக் கேட்டுக் கொண்டனர். இதை அடுத்து, விடுதி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் அவர்களை சமாதானம் செய்து அழைத்து வருவதற்காக, கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார், சிறப்பு விமானத்தில் மும்பை விரைந்தார். இன்று காலை அந்த விடுதிக்குச் சென்ற டி.கே.சிவக்குமாரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இருப்பினும் அங்கிருந்து செல்ல மறுத்த சிவக்குமார், விடுதிக்குள் செல்வதில் உறுதியாக இருந்தார். ஒரு கட்டத்தில் அங்கேயே நாற்காலிகளை போட்டு அவர் அமர்ந்தார். மராட்டிய மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சஞ்சய் நிரூபம், மிலிந்த் தியோரா ஆகியோரும் சிவக்குமாருடன் இணைந்தனர். சுமார் 6 மணி நேரம் வரை விடுதி முன் தர்ணா செய்து வந்த சிவக்குமாரையும் உடன் இருந்த தலைவர்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விடுதி முன்பு 144 தடை உத்தரவும் பிறப்பித்தனர். கைது செய்யப்பட்ட அவர்கள், கலினா பல்கலைக்கழக ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பாஜக விலை பேசுவதாகக் கூறி மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், சித்தராமையா ஆகியோர் ஆளுநர் மாளிகை முன் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே கர்நாடகாவில், மேலும் 2 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்திருக்கின்றனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டாக்டர் சுதாகர் மற்றும் நாகராஜ் ஆகிய இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள், சபாநாயகரிடம் தங்கள் ராஜினாமா கடிதங்களை வழங்கியுள்ளனர்.
அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து வருவது குறித்து, கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார், செய்தியாளர்களிடம் பேசினார். தற்போது மேலும் 2 எம்எல்ஏக்கள் தம்மிடம் ராஜினாமா கடிதங்களை வழங்கியிருப்பதாகவும், இருப்பினும், தாம் எந்தவொரு ராஜினாமா கடிதங்களையும் ஏற்கவில்லை எனக் கூறியிருக்கிறார். ராஜினாமா கடிதம் அளித்திருக்கும் அனைவருக்கும், வருகிற 17ஆம் தேதி வரை விளக்கம் அளிக்க கால அவகாசம் அளித்திருப்பதாகவும், சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்திருக்கிறார்.
