சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகள், அரசு கட்டடங்கள், தனியார் கட்டடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயமாகும். இதை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ், அதிகாரிகளுடன் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் ஆலோசனை நடத்தினார்.
பருவ மழை துவங்க உள்ள நிலையில் அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்கவும் உறை கிணறுகள் அமைக்கும் பணிகளை விரைந்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்திடவும் பயன்பாடற்று உள்ள சமுதாய கிணறுகளை கண்டறிந்து மழைநீர் இணைப்புகள் ஏற்படுத்தவும் வார்டு வாரியாக ஒரு குழு வீதம் 200 குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பாக அமைக்கப்பட்டுள்ள இக்குழுக்கள், இதுவரை 2,72,061 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளனவா என ஆய்வு செய்துள்ளன. இதில் 1,62,284 கட்டடங்களில் ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் நல்ல நிலையில் உள்ளன.
சிறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளபட வேண்டிய நிலையில் உள்ள 38,507 கட்டட உரிமையாளர்களுக்கு அப்பணிகளை ஒரு வாரக்காலத்திற்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 69,490 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட வேண்டும். இக்கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, செப்டம்பர் மாதம் இறுதிக்குள் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பயன்பாடற்று உள்ள 238 சமுதாய கிணறுகள் கண்டறியப்பட்டு அவற்றில் 47 கிணறுகள் தூர்வாரப்பட்டு அருகில் உள்ள பகுதிகளிலிருந்து மழைநீர் சேகரிக்க இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மீதமுள்ள கிணறுகளை புனரமைக்கும் பணிகளுக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாநகராட்சிக்குட்பட்ட சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் மக்களுக்கு போக்குவரத்து இடையூறின்றி இதுவரை 339 இடங்களில் உரைகிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகளினால் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் சுமார் 4 அடி அளவிற்கு உயர்ந்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
