சந்திரயான்-2 விண்கலத்தின் பயணத்தில் முக்கிய நிகழ்வாக, நிலவின் வட்டப்பாதைக்குள் விண்கலத்தை செலுத்தும் நடவடிக்கையில் இஸ்ரோ இன்று ஈடுபட உள்ளது.
நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3 ஆயிரத்து 850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
அப்போது ராக்கெட்டில் இருந்து பிரிந்த விண்கலம் பூமிக்கு அருகே குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 45 ஆயிரத்து 475 கிலோ மீட்டர் தொலைவிலும் நீள்வட்ட பாதையில் பூமியை சுற்றி வந்தது. அதன்பின்னர் ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை சந்திரயானின் சுற்றுப்பாதை படிப்படியாக 5 முறை அதிகரிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது.
சந்திரயான்-2 பூமியைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து தூரமாக சென்ற நிலையில், கடந்த ஆகஸ்ட் 14ம் நாள் அதிகாலை 2.21 மணிக்கு 6-வது முறையாக சுற்றுவட்டப் பாதை மாற்றப்பட்டு நிலவை நோக்கி வெற்றிகரமாக திசை மாற்றப்பட்டது.
நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கிய சந்திரயானின்-2 விண்கலத்தை இன்று நிலவின் சுற்றுவட்டப்பாதையில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சந்திரயானின் திரவ என்ஜின் இன்று காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் இயக்கப்பட உள்ளது. இது மிகவும் சவாலான நகர்வு என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் விண்கலம் சென்ற பிறகு, 4 முறை அதன் சுற்றுப்பாதை மாற்றப்படும். இதன் பின்னர் நிலவின் மேற்பரப்பில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றும் வகையில் சந்திரயான்-2 விண்கலம் நிலைநிறுத்தப்படும்.
அதன்பின்னர் சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து செப்டம்பர் 2-ம் தேதி பிரியும் விக்ரம் விண்கலத்தின் சுற்றுப்பாதையானது இரண்டு முறை மாற்றியமைக்கப்பட்டு அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்படும். பின்னர் செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் மெதுவாக தரையிறங்கும்” என சிவன் தெரிவித்துள்ளார். சந்திரயான் -2 விண்கலம் நன்றாக செயல்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
