தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவ மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இப்போது அந்த மழையும் குறைந்து விட்டது.
சென்னை உள்பட வடமாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த வாரம் விட்டு விட்டு மழை பெய்தது. ஆனால் ஏரிகளுக்கு தண்ணீர் வரும் அளவுக்கு மழை பெய்ய வில்லை.
இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, சேலம், தர்மபுரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 12 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டும் குறைந்துள்ளது என்றும் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
