காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பிவிட்ட நிலையில் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 23 ஆயிரம் கன அடியும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 39 ஆயிரம் கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்படுப்படுகிறது. தமிழக – கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவிலும், ஒகேனக்கல்லிலும் நீர்வரத்து வினாடிக்கு 79 ஆயிரம் கன அடியாக உள்ளது
மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 73 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணை முழு கொள்ளவான 120 அடியை 43வது முறையாக எட்டியுள்ள நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி வீதம் உபரி நீர் திறக்கப்படுகிறது.
இதன் காரணமாக சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர் ஆகிய 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரி கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
மேட்டூர் அணை மற்றும் அதன் கரையோரங்களில் பாதுகாப்பற்ற முறையில் நீரில் இறங்கி குளிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, செல்ஃபி எடுப்பதையோ தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
அதே போன்று திருச்சி முக்கொம்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முக்கொம்பில் பாதுகாப்பற்ற சூழலில் குளிக்க முற்படும் சுற்றுலா பயணிகளை கண்காணித்து தடுக்கும் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்காக கல்லணையிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், கடைமடை பகுதியான புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்ட எல்லையை வந்தடைந்தது. நல்லம்பல் நூலாறு நீர்தேக்கத்திற்கு வந்தடைந்த நீரை, ஐந்து கண் மதகு வழியாக புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த்ராஜா, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நூலாறு நீர்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரால் சுமார் 9 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
