அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான இறுதி அறிக்கையை நேற்று சீல்வைத்த கவரில் மத்தியஸ்தர் குழு தாக்கல் செய்தது. இதையடுத்து அயோத்தி வழக்கை தினசரி வழக்காக ஏற்பது குறித்து உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதையடுத்து அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் உள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் பிரச்சினை நீடிக்கிறது. இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், நிலத்தை மூன்றாக பிரித்து நிர்மோகி அகோரா, ராம்லல்லா, சன்னி வக்பு வாரியம் ஆகியவற்றுக்கு பிரித்துக் கொடுக்கும்படி கடந்த 2010ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து 14 மேல் முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதனை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நியமிக்கப்பட்டதுடன், நீதிமன்றத்திற்கு வெளியே சமரச தீர்வு காண்பதற்காக மூன்று நபர் கொண்ட நடுவர் குழுவை நியமித்தது. இக்குழுவில் இடம்பெற்ற நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் பல்வேறு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத்தீர்வை எட்டும் முயற்சியை மேற்கொண்டனர். நேற்று இக்குழுவின் இறுதி அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அயோத்தி வழக்கை இன்று விசாரிக்க உள்ள உச்சநீதிமன்றம் தினசரி விசாரணையை நடத்துவது அவசியமா என்பது குறித்து முடிவை வெளியிட உள்ளது.
