சென்னையில் அட்டிகா கோல்டு நிறுவன ஊழியரிடம் நடத்தப்பட்ட கொள்ளை முயற்சியை காவலாளி ஒருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கொள்ளையர்களை விரட்டியடித்தார்.
அங்கு பணப்பரிவர்த்தனை அதிகாரியாக இருக்கும் கிரிஷ் என்பவர், நேற்று அதிகாலை பெங்களூருவில் இருந்து பேருந்து மூலம் 20 லட்சம் ரூபாயோடு கோயம்பேடுக்கு வந்துள்ளார்.
அங்கிருந்து பாதுகாவலர் சந்திரக்குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் தி.நகருக்கு வந்து கொண்டிருந்தபோது, சிவப்பு நிறக் கார் ஒன்றில் 3 மர்ம நபர்கள் பின்தொடர்ந்துள்ளனர்.
நிறுவனத்தின் வாசலில் கிரிஷ் இறங்கிய போது அவரிடம் இருந்த பணப்பையை முகமூடி அணிந்த கொள்ளைக் கும்பல் பறிக்க முயற்சி செய்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த கிரிஷ் சப்தமிட்டுள்ளார். இதனைக் கண்ட அட்டிகா நிறுவனத்தின் உள்ளே துப்பாக்கியுடன் காவலில் இருந்த சையத் சுல்தான் என்பவர் தனக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு நிறுவனத்தின் வெளியே வருவதற்குள் கொள்ளையர்கள் தங்கள் முயற்சியைக் கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பரபரப்பான இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
முகமூடி அணிந்திருந்த அந்தக் கொள்ளையர்கள் கைத்துப்பாக்கி மற்றும் இரும்பு ராடு வைத்திருந்தாகவும், இந்தி மொழியில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து பாண்டி பஜார் காவல்நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
