காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தையொட்டி, காஞ்சிபுரத்தில் வருகிற 13, 14, 16ஆம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தி வரதர் வைபவத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஒரு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
அத்திவரதர் வைபவம் வருகிற 17ஆம் தேதியன்று நிறைவடைய உள்ளது. இதனால், தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், கூடுதலாக மேற்கொள்ளப்பட வேண்டிய வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. காஞ்சிபுரத்திற்கு வரும் கூடுதல் வாகனங்களை பள்ளி, கல்லூரி வளாகங்களில் நிறுத்துவது, பக்தர்கள் ஓய்வெடுத்து செல்வதற்கான வசதிகள் ஏற்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
வயதானோர், மாற்றுத் திறனாளிகள் அமர்ந்து செல்லும் வகையிலான வசதிகள் ஏற்படுத்துவது, கூடுதல் துப்புரவு பணியாளர்களை சென்னை மாநகராட்சியிலிருந்து அனுப்புவது, கூடுதல் காவலர்களை நியமிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், அன்பழகன், சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன், தலைமை செயலர் சண்முகம், சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் வரும் 13, 14, 16 ஆகிய 3 நாட்களுக்கு விடுமுறை, பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை ஆகிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
