40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை முதல் தேதி தொடங்கியது. முதல் 31 நாட்கள் சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர், இந்த மாதம் 1-ந் தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிக்கு திரண்டு வந்து நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். நடிகை நயன்தாரா உள்ளிட்ட பிரபலங்களும் தரிசனம் செய்தனர்.
வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று ஆடி கருட சேவை நடைபெற்றதால், மாலை 5.30 மணியோடு அத்திவரதர் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.இரவு 7 மணி அளவில் வாகன மண்டபத்தில் கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இரவு 8 மணி அளவில் அத்தி வரதர் நடை திறக்கப்பட்டு பொது தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இன்று காலை 5 மணி முதல் பக்தர்கள் பொது தரிசனத்தில் மட்டும் அனுமதிக்கப்பட்டுகின்றனர். இன்று எந்தவித பாஸ்களும் செல்லாது என்பதால் முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்திவரதரை தரிசிக்க இன்று தான் கடைசிநாள் என்பதால் மிக அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதற்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை அத்திவரதருக்கு பூஜைகள் செய்யப்பட்டு, அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நாளை ஆகம விதிகளின்படி அனந்தசரஸ் திருக்குளத்தில் அத்திவரதரை எழுந்தருள செய்வதற்கான பணிகள் நடைபெற உள்ளது. இதன் பின்னர் அடுத்த நாற்பது ஆண்டுகள் கழித்து, 2059 ஆம் ஆண்டில் மீண்டும் அத்திவரதர் சிலை தரிசனத்திற்காக குளத்தில் இருந்து எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
