சயனக் கோலத்தில் அத்திவரதரை தரிசிக்க கடைசி நாளான இன்று கூட்டம் அலை மோதியது. இதனிடையே துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அத்திவரதரை தரிசனம் செய்தார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் அத்திவரதர் வைபவம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 30 நாட்களாக நடைபெற்று வருகிறது.
சயனக் கோலத்தில் கடைசி நாளான இன்று அத்திவரதருக்கு மஞ்சள் நிற பட்டாடை, மல்லிகை, சம்பங்கி ரோஜா மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அத்திவரதரை இன்று தரிசனம் செய்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
நாளை முதல் அத்திவரதர் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதால் இன்று 12 மணிக்குப் பிறகு பக்தர்கள் கோவில் வளாகத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
12 மணிக்குள் கோவில் வளாகத்துக்குள் சென்றுவிட்ட பக்தர்கள் மட்டும் மாலை 5 மணி வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். 5 மணிக்குப் பின் நின்ற கோலத்திற்கு அத்திவரதரை மாற்றும் ஏற்பாடுகள் தொடங்கும்.
