பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதிவரை நடைபெறும் எனும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2019-2020-வது கல்வி ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மொழிப்பாடங்களில் தலா இரு தாள்களாக தேர்வெழுதும் நடைமுறையை ஒரே தாளாக மாற்றி கடந்த 13-ம் தேதி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.
மொழித்தாள் 1, மொழித்தாள் 2, ஆங்கிலம் முதல் தாள், இரண்டாம் தாள் என இருந்த பாடங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டே தாள்களாக தேர்வு நடத்தப்படவுள்ளது.
இந்த முடிவுக்கு ஏற்ப ஏற்கெனவே அறிவித்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை மாற்றியமைத்து வெளியிட்டுள்ளது. அதன்படி, 2020-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி மொழிப்பாடத்துக்கான தேர்வு நடைபெறும். 28-ம் தேதி விருப்ப மொழிப்பாடமும், 31-ம் தேதி ஆங்கிலப் பாடத்துக்குமான பொதுத் தேர்வுகள் நடைபெறும்.
2020-ம் ஆண்டு ஏப்ரல் 3.ம் தேதி சமூக அறிவியலும், 7-ம் தேதி அறிவியலும், 13-ம் தேதி கணிதத்துக்கான பொதுத் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு மே4-ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும் என்ற அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை எனவும் பள்ளிக் கல்வித்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
