ஆடி அமாவாசையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில், ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.
தூத்துக்குடி
இந்துக்களின் புனித தினங்களில் ஒன்றான ஆடி அமாவாசையன்று கடலில் நீராடி, தர்ப்பணம் செய்து வழிபடுவதன் மூலம் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும் என்பது ஐதிகம். எனவே இந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி புதிய துறைமுகம் மற்றும் திரேஸ்புரம் ஆகிய கடற்கரை பகுதியில் திரண்ட ஆயிரக்கணக்கானோர் கடலில் நீராடியபின், எள் மற்றும் தண்ணீரை கொண்டு தர்ப்பணம் செய்தனர்.
கன்னியாகுமரி
முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் உள்ள திரிவேணி சங்கமத்தில் அதிகாலை முதல் நூற்றுக்கணக்கானோர் நீராடிவிட்டு, மறைந்த தங்கள் மூதாதையர்களுக்கு வேத விற்பன்னர்கள் மூலம் பலி கர்மம் செய்தனர். முன்னோர்களின் ஆன்மா சாந்தி பெற வேண்டி பகவதி அம்மன் கோவிலில் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
திருச்சி
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், அய்யாளம்மன், ஓடத்துறை உள்ளிட்ட காவிரிப் படித்துறைகளில் ஆடி அமாவாசை முன்னிட்டு தங்கள் முன்னோர்களை நினைத்து திதி கொடுக்க ஏராளமானோர் இன்று திரண்டனர்.
திருவாரூர்
காசிக்கு நிகரான புனித தலமாக கூறப்படும் திருவாரூர் கமலாலய தீர்த்தகுளத்தில் அரிசி, தேங்காய், பழம் ஆகியவற்றை வைத்து திதிகொடுத்தனர்.
ராமேஸ்வரம்
ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் ராமேஸ்வரத்திற்கு வந்திருந்தனர். அதிகாலையில் அக்னிதீர்த்தக் கடலில் பித்துருக்களுக்கு பிண்டம், எள் வைத்து முன்னோர்களுக்கு பூஜை செய்தனர்.
நெல்லை
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே, தாமிரபரணி ஆறு பாயும் பாபநாசம் படித்துறையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
தஞ்சை
தஞ்சை மாவட்டம், திருவையாறு காவிரிக்கரையில் உள்ள புஷ்ய மண்டபத்துறையில், ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு, திதிகொடுத்து வழிபாடு நடத்தினர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில், காவிரி, பவானி, அமுத நதி, ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில், ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். காசி, ராமேஸ்வரத்திற்கு இணையாக பவானி கூடுதுறையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் வேண்டிய பலன் கிடைக்கும் என்பதும், முன்னோர்களின் ஆசிர்வாதம் தடையின்றி கிடைக்கும் என்பதும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் அங்கு தர்ப்பணம் செய்து பின்னர் சங்கமேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
புதுச்சேரி
புதுச்சேரியில் கடற்கரையிலும், ஆங்காங்கே கடலோர பகுதியிலும், ஏராளமானோர் கடலில் நீராடி, தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.
நாகை
நாகை மாவட்டம், சீர்காழி அருகே காவிரி ஆளு கடலில் கலக்கும் பூம்புகார் சங்கமுக தீர்த்தத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகளை செய்து வழிபட்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான சதுரகிரிமலையில் உள்ள அருள்மிகு சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலில், ஆடி அமாவசையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.
அதிகாலையிலே தாணிப்பாறையில் குவிந்திருந்த பக்தர்கள், அங்கு முடிகாணிக்கை கொடுத்து, நடைபாதை திறக்கப்பட்டதும், 7 கிலோ மீட்டர் தூரம், மலைப்பாதையில் வரிசையாக நடந்து சென்று வழிபட்டனர்.
ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதுடன், பக்தர்களின் உடமைகளை வனத்துறையினர் சோதனை செய்து அனுப்பினர்.
தேனி
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் புனித நீராடிய பின்பு, பிண்டம் வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இறவங்களாறு மற்றும் வயர் அணையில் இருந்து நேற்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டு அருவிகளில் நீர் கொட்டுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
