தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தற்போதைய இறுக்கமான சட்டங்களை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை சென்ற கனிமொழி தலைமையிலான குழுவினர் நேற்று கொழும்பில் பிரதமர் ரணிலை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர். அப்போது, இரு நாட்டு மீனவர் பிரச்னையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என கனிமொழி கேட்டுக் கொண்டார்.
இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் போது அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுவதை சுட்டிக்காட்டிய கனிமொழி, மீனவர்களை விடுவிக்கும்போது படகுகளையும் சேர்த்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்..
படகுகள் விடுவிக்கப்படாததால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறிய அவர், இதுதொடர்பான சட்டத்தைத் தளர்த்தி, படகுகளையும் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். போரால் பாதிக்கப்பட்ட கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் மீள்குடியேற்றம் குறித்து ரணிலிடம் கனிமொழி கேட்டறிந்தார்.
இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் திலிப் வெதாராச்சியையும் சந்தித்து பேசிய கனிமொழி, இருநாட்டு மீனவப் பிரதிநிதிகள் சந்திப்பை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்போது இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.
முன்னதாக, இலங்கை அமைச்சரும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem) இல்லத் திருமண நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் சிறிசேனாவையும் கனிமொழி சந்தித்தார்.
