டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு வந்த முதியவர் ஒருவரை, பயணிகளை சோதனையிடும் வழக்கமான நடைமுறையின்படி அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்த வயதுக்கும் அவரது தோற்றத்துக்கும் பெருமளவு வேறுபாடு இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்துள்ளனர்.
முதியவராக தோன்றினாலும், அவரது நடவடிக்கைகளும், உருவமும் 81 வயது முதியவர் என்ற அளவுக்கு இல்லை. எனவே அவரை அழைத்து சென்ற அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், அந்த நபர் 32 வயது இளைஞர் என்பது தெரிய வந்தது.
மேலும் அந்த நபர் குஜராத் மாநிலம் அஹமதாபாத்தை சேர்ந்த ஜெயேஷ் படேல் என்பதும், அம்ரிக் சிங் என்ற முதியவர் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்து நியூயார்க் செல்ல திட்டமிட்டதும் தெரிய வந்தது. முதியவர் போல் தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக வெள்ளை நிற டை அடித்துக் கொண்டு, ஸீரோ பவர் கொண்ட மூக்கு கண்ணாடியையும் அணிந்து வந்த அந்த நபர், ஒரு படி மேலே சென்று தள்ளாத முதியவர் போல் காட்டிக் கொள்வதற்காக வீல் சேரிலும் வந்துள்ளார்.
ஆனால் அத்தனை முயற்சிகளும் வெற்றிகரமாக அரங்கேறிய நிலையில் அதிகாரிகளின் சோதனையின் சிக்கிக் கொண்டார். இதையடுத்து அந்த நபர் ஆள்மாறாட்டம் செய்த குற்றச்சாட்டில், குடியேற்ற அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
