பொருளாதார மந்த நிலையை உறுதிப்படுத்துவது போல் சமீபத்தில் வெளியான புள்ளி விவரங்கள் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இருந்ததால், இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக நேரம் முடிந்த பிறகு, ஜிடிபி டேட்டா வெளியானது. 6 ஆண்டுகளில் இல்லாத விதத்தில் முதல் காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்ததாக அறிவிக்கப்பட்டது. அதே போன்று திங்கட்கிழமை நிலக்கரி, கச்சா எண்ணெய் உள்ளிட்ட 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி ஜூலை மாதம் 2 சதவீதமாக குறைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க டாலருக்கு நிராக இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவடைந்து வருகிறது.
இது போன்ற எதிர்மறையான பொருளாதார புள்ளி விவரங்களின் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளில் எதிரொலித்தது. முதலீட்டாளர்கள் பீதியில் பங்குகளை விற்று தள்ளியதால், பல நிறுவனங்களின் பங்கு விலைகள் வீழ்ச்சி அடைந்தன. 30 நிறுவனங்களின் பங்குகள் அடங்கிய மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், வர்த்தக நேர முடிவில் 769 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 36,562 புள்ளிகளாக சரிந்தது.
50 நிறுவனங்களின் பங்குகள் அடங்கிய தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 225 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 10,797 புள்ளிகளாக குறைந்தது. வாகன உற்பத்தி நிறுவனங்களின் ஆகஸ்ட் மாத விற்பனை முடிவுகளும் சரிவடைந்து இருந்ததால், ஆட்டோ துறை நிறுவன பங்குகள் கடும் சரிவை சந்தித்தன.
