அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நிலம் முஸ்லீம்களுக்கே சொந்தம் என்று உச்சநீதிமன்றத்தில் வக்பு வாரியம் உரிமை கோரியுள்ளது. இதில் ஒரு பங்கை இந்துக்களுக்கு விட்டுக் கொடுக்கத் தயார் என்றும் வக்பு வாரியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எம்.சி.டிங்கரா தெரிவித்தார்.
அயோத்தி வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முன்பு கடந்த 16 நாட்களாக நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்துக்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மிஸ்ரா, பாபர் மசூதி மசூதியே அல்ல என்று வாதிட்டார்.
அது குரான் வழிகாட்டலின்படியும் இஸ்லாமிய நெறிப்படியும் கட்டப்படவில்லை என்று அவர் வாதங்களை முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து நேற்று நடந்த விசாரணையில் வக்பு வாரியம் நிலம் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கோரியது.
மசூதி குறித்து எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு பதிலளித்த டிங்கரா, மொகலாய மன்னர் பாபரின் ராணுவ கமாண்டர் மீர் பாக்கி என்பவரால் பாபர் மசூதி கட்டப்பட்டதாக வரலாற்று ஆவணங்களை தாக்கல் செய்தார். 1944 வரை இது ஷியா வக்பு வாரியத்தின் உடைமையாக இருந்ததாகவும் டிங்கரா தெரிவித்தார்.
