கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்திற்கு உடனடி நிவரணமாக 30 கோடி ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து தனது தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு பல உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த 6910 நபர்கள் மீட்கப்பட்டு 67 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டதை முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பகுதியாக சேதமடைந்த 1225 குடிசைகளுக்கு தலா 4100 ரூபாய் மற்றும் முழுமையாக சேதமடைந்த 296 குடிசைகளுக்கு தலா 5000 ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளாக அவர் தெரிவித்துள்ளார். முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு மாற்றாக பசுமை வீடுகள் திட்டத்தில் புதிய வீடுகள் கட்டித்தர உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
சேதமடைந்த உட்கட்டமைப்புகளை நிரந்தரமாக சீரமைக்க தேவைப்படும் நிதி தொடர்பான முன்மொழிவுகளை விரைந்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் நீலகிரி மாவட்டத்திற்கு உடனடி நிவாரணத்திற்காக 30 கோடி ரூபாயை மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
