வேலூர் மக்களவைத் தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த 20 நாள்களுக்கு மேலாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தவுடன், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அங்கு முகாமிட்டிருந்த பிற மாவட்ட அரசியல் கட்சியினர் வெளியேற்றப்பட்டனர்.
இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளராக ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளராக கதிர்ஆனந்த் உள்பட 30 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர்.
1,553 வாக்குச்சாவடிகளில் 179 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. 20 கம்பெனிகளைச் சேர்ந்த 1,600 துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் உள்பட வாக்குப்பதிவுக்கு தேவையான பொருள்கள் அனுப்பும் பணி இன்று காலை மேற்கொள்ளப்பட்டு மாலைக்குள் மாலை 6 மணிக்குள் கொண்டு சேர்க்கப்பட்டு அனைத்து வாக்குச்சாவடிகளும் வாக்குப்பதிவுக்கு தயார்படுத்தப்படும். நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. பதிவான வாக்குகள் வருகிற 9ந் தேதியன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
