மாநிலங்களவையில் பெரும்பான்மை பலம் இல்லாத போதிலும், பல்வேறு தடைகளைக் கடந்து முத்தலாக் தடை மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு மிகப்பெரிய வெற்றியாக கருதப்படும் முத்தலாக் தடை மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்களவையில் பெரும்பான்மை பலத்துடன் கடந்த வாரம் நிறைவேறிய இந்த மசோதா மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு நான்கரை மணி நேரம் விவாதம் நடைபெற்றது.
மாநிலங்களவையில் மொத்தமுள்ள 242 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 107 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். இதனால் பெரும்பான்மையை அடைய மற்ற கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது.
இந்த மசோதாவிற்கு பிஜு ஜனதாதளம் ஆதரவு அளித்ததால் பலம் கூடியது. மசோதாவை எதிர்த்த கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதாதளத்தின் 11 எம்பிக்களும், அதிமுகவின் 6 எம்பிக்களும் வெளிநடப்பு செய்தனர்.
இதுதவிர 18 எம்பிக்கள் அவைக்கு வராததால் முத்தலாக் தடை மசோதா எளிதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் விவாதத்திற்குப் பின் நடைபெற்ற குரல் வாக்கெடுப்பின்போது, மசோதாவுக்கு ஆதரவாக 99 எம்பிக்களும் எதிராக 84 எம்பிக்களும் வாக்களித்தனர்.
முன்னதாக, இந்த மசோதாவை நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையும் அவையில் நிராகரிக்கப்பட்டது.
