தொழில் நெருக்கடி காரணமாக ஆற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்ட காஃபிடே நிறுவன தலைவர் சித்தார்த்தாவின் உடல் மங்களூரு நேத்ராவதி நதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் காபி டே என்ற பெயரில் 1550 கிளைகளை பரப்பி வெற்றிகரமான தொழில் அதிபராக 37 ஆண்டுகள் வலம் வந்த சித்தார்த்தா, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகள் மாளவிகாவை மணமுடித்திருந்தார். லாபத்தை பல்வேறு தொழில்களில் அவர் முதலீடு செய்தார். இந்நிலையில், மைண்ட் டிரீ நிறுவனத்தில் தமக்கு இருந்த பங்குகளை கடந்த 2017-ஆம் ஆண்டு சித்தார்த் விற்பனை செய்தார். இதன் மூலம் அவருக்கு 3210 கோடி ரூபாய் கிடைத்தது.
ஆனால், இதற்கு உரிய வருமான வரி கட்டவில்லை என்று கூறி வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அவர் 600 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்தை மறைத்து விட்டதாகவும், 300 கோடி ரூபாய் வரி கட்ட வேண்டிய நிலையில், 46 கோடி ரூபாய் மட்டுமே வரி கட்டியதாகவும் வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. மேலும் கடந்த ஜனவரி மாதம் சித்தார்த்திற்கு சொந்தமான மைண்ட் டிரி நிறுவனத்தின் 75 லட்சம் பங்குகளை வருமான வரித்துறை முடக்கியது. இது சித்தார்த்தை நிதி நெருக்கடியில் தள்ளியது. இதனால் தமது ஊழியர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்த சித்தார்த்தா தொழிலில் தாம் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்ததால், ஒரு தொழிலதிபராக தாம் தோல்வியை சந்தித்ததாக குறிப்பிட்டுள்ளார். காரை ஆற்றங்கரையில் நிறுத்திவிட்டு நடைபயிற்சிக்கு சென்ற அவர் சுவர் ஏறி ஆற்றில் குதித்துவிட்டார்.
இதை சில மீனவர்கள் பார்த்து தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து, மீட்புக்குழுவினர் ஆற்றில் உடலைத் தேடி வந்தனர். காவல்துறையினர் தீயணைப்புத் துறையினருடன் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் அடஙங்கிய மீட்புக்குழுவினர் ஆற்றில் சித்தார்த்தாவின் உடலை தேடி வந்தனர். இந்நிலையில், 36 மணி நேரம் கழித்து இன்று அதிகாலை ஆற்றிலிருந்து அவர் உடல் மீட்கப்பட்டுள்ளது. மீனவர் ஒருவர் உடல் கரையொதுங்கியதைத் தெரியப்படுத்தினார். உடலைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்வுக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தனர். உடலைப் பெறுவதற்காக எஸ.எம்.கிருஷ்ணாவின் உறவினர்கள் மங்களுருக்கு விரைந்துள்ளனர்.
