நட்டத்தில் இயங்கும் பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். (MTNL) நிறுவனங்களை மீட்டெடுக்க 74 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2018 – 2019 நிதி ஆண்டில் 13 ஆயிரத்து 804 கோடி ரூபாயை இழந்த பி.எஸ்.என்.எல். நிறுவனமானது, நாட்டிலேயே அதிக இழப்பை சந்தித்த பொதுத் துறை நிறுவனமாக உள்ளது. அடுத்த இடத்தில் ஏர் இந்தியாவும், அதற்கடுத்த இடத்தில் எம்.டி.என்.எல். (MTNL) என்ற தொலைதொடர்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனமானது 3 ஆயிரத்து 398 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது.
இழப்பு தொடர்பாக மத்திய தொலைதொடர்பு அமைச்சகத்திற்கு ஏற்கெனவே கடிதம் எழுதிய பி.எஸ்.என்.எல்., தனது ஊழியர்களுக்கு ஊதியம் கூட கொடுக்க முடியாத நிலையில் தவிப்பதாகவும், உடனடி நிதி உதவி அவசியம் என்றும் வலியுறுத்தி இருந்தது. பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய நிறுவனங்கள் மூடப்படும் பட்சத்தில் பெரும் இழப்பு ஏற்படும் என்பதால், அந்த நிறுவனங்களை மீட்டெடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான இரு நிறுவனங்களுக்கும் 74 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான வரைவு அமைச்சரவைக் குறிப்பில், 4ஜி தொழில்நுட்பத்திற்கு 20 ஆயிரம் கோடி ரூபாயும், புதிய சேவைகள் மற்றும் உற்பத்தியை மக்களிடம் கொண்டு செல்ல 13 ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வி.ஆர்.எஸ். பெற்றுக் கொண்டு முன்கூட்டியே ஓய்வு பெறுவோருக்கான பணப்பலன்களை வழங்க 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வி.ஆர்.எஸ். பெறுவதை ஊக்குவிக்க, அவர்களுக்கு 5 விழுக்காடு கூடுதல் இழப்பீடு வழங்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
