தமிழகத்தில் வலுக்கட்டாயமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது என்று மக்களவையில் மத்தியஅமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி அளித்துள்ளார்.
மக்களவையில் நேற்று ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்த தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, காவிரி டெல்டா விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாகவும், கதிராமங்கலம், நெடுவாசல் கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருவதாக குறிப்பிட்டார். காவிரி டெல்டாவில் எண்ணெய் இருப்பதாகக் கிணறுகளைத் தோண்டுவதற்கு முன்பு அங்குள்ள மண் குறித்த விவரங்கள் திரட்டப்பட்டதா என கேள்வி எழுப்பினார்.
எந்தவித கணக்கெடுப்பும் மேற்கொள்ளாமல், டெல்டாவில் 341 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்ட எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது என்றும் டி.ஆர். பாலு வினவினர். மத்திய அரசின் செயல்பாடுகள் விதிமுறைகளுக்கு மாறானது மட்டுமின்றி சட்டவிரோதமானது என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
இதற்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளிக்க முற்பட்டபோது, ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என தி.மு.க. உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.
தொடர்ந்து பேசிய பிரதான், டெல்டாவில் நடைபெறும் பணிகள் ஒரு தொடர் நிகழ்வு என்றும், தமிழகத்தில் இதனை எதிர்ப்பதை தாம் அறிந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். காவிரிப் படுகையில் எண்ணெய் எடுக்கும் விவகாரத்தில் தி.மு.க.வும், தமிழக அரசும் ஒரே கருத்தைக் கொண்டிருப்பதாக தெரிவித்த பிரதான், மத்திய அரசு யார் மீதும் எதையும் திணிக்காது என்று உறுதி அளித்தார். இதுபற்றி விவாதித்து முடிவெடுக்க வருமாறு கட்சியினருக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
