கொல்கத்தா என்.ஆர்.எஸ். மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோயாளி ஒருவர் இறந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் தாக்கியதில் இரு பயிற்சி மருத்துவர்கள் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து மேற்கு வங்கத்தில் கடந்த 6 நாட்களாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்பதாகக் கூறிய மம்தா, பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
மேற்குவங்கத்தில் நடந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாடுதழுவிய அளவில் ஒருநாள் வேலைநிறுத்தத்திற்கு இந்திய மருத்துவக் கழகம் அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மருத்துவர்கள் போராட்டத்தில் மட்டும் ஈடுபடுவார்கள் என்றும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அரசு மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள். அவசர கால சிகிச்சைப்பிரிவு வழக்கம் போல் செயல்படும் என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
