ஒரு இந்திய வீரர் கொல்லப்பட்டால், அதற்குப் பதிலடியாக 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்ப்பதாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸை சாடினார்.
370ஆவது பிரிவை ரத்து செய்திருப்பதன் மூலம் பிரதமர் மோடி மாபெரும் பணியை செய்து முடித்திருப்பதாகவும், இதன் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் ராகுல்காந்தியும், சரத்பவாரும் தங்கள் நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என அமித்ஷா வலியுறுத்தினார். பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் தேசிய பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டு, ஒரு வீரர் உயிரிழந்தால் அதற்கு பதிலாக எதிரிகள் 10 பேர் கொல்லப்படுவார்கள் என்பதை ஒட்டுமொத்த உலகமே இப்போது அறிந்திருப்பதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் பாலக்கோட் தீவிரவாத முகாம் மீதான தாக்குதலை மறைமுகமாகக் குறிக்கும் அவர் இதைத் தெரிவித்தார். காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியையும் சாடிய அமித்ஷா, முன்பு மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்தபோது இந்த கூட்டணி செய்த பணிகள் என்ன என்றும் வினவினார்.
