பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, அனைத்துக் கட்சித் தலைவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னேறிய வகுப்பை சேர்ந்தவர்களில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு சட்டமியற்றியுள்ளது. இதை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள, முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை விளக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார். இதுகுறித்து உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துக்களை கேட்டறிய வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 69 சதவீத இட ஒதுக்கீடு கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் தலைவர்களை அழைத்து பேசி ஒரு மனதாக எடுக்கப்படும் முடிவே பின்பற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 69 சதவீத இடஒதுக்கீட்டிலிருந்து ஒரு புள்ளி கூட குறையாமல் பார்த்துக் கொள்வோம் எனவும் உறுதியளித்தார்.
