அமைதி திரும்ப வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் கொட்டும் மழையில் குடைபிடித்தபடி பேரணி நடத்தியதால் ஹாங்காங் குலுங்கியது.
ஹாங்காங்கில் குற்றவழக்கில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் இறங்கியதால், அதுதொடர்பான மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இருப்பினும் அந்த மசோதாவை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தியும், ஹாங்காங் தலைவர் கேரி லேமுக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது ஆங்காங்கு கலவரமும் வெடித்து வருவதால், ஹாங்காங்கில் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போராடும் காவல்துறைக்கு ஆதரவாகவும், ஹாங்காங்கில் இயல்பு நிலை மீண்டும் திரும்ப வேண்டும் என கோரியும் சுமார் 5 லட்சம் பேர், அங்குள்ள தாமார் பூங்காவில் கொட்டும் மழையில் குடை பிடித்தபடி திரண்டனர். பின்னர், வன்முறையை நிறுத்தக்கோரி முழக்கமிட்டும், சீனாவின் தேசிய கீதத்தை பாடியும் பேரணியாக சென்றனர்.
பேரணியின்போது, வன்முறையாளர்களால் அடித்து துன்புறுத்தப்பட்ட பத்திரிக்கை நிரூபர் ஃபூ குயஹோ (Fu Guohao) என்பவரின் உணர்ச்சி மிகுந்த கருத்து பொதிந்த வீடியோ மற்றும் காவல்துறை அதிகாரியின் மனைவி எழுதிய கடிதமும் வெளியிடப்பட்டது.
