காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவருக்கும் முன்னவர் அத்திவரதர் என்ற அத்தி மரத்தால் செய்யப்பட்ட 13 அடி உயரமுள்ள பெருமாள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சிலை கோவிலில் மேற்கு ராஜகோபுரத்திற்கு வடமேற்கில் உள்ள அனந்தசரஸ் என்ற குளத்தில், தண்ணீருக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள தனி தரையடி மண்டபத்தில் பத்திரமாக வைக்கப்பட்டது.
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே, குளத்தில் உள்ள நீரை இறைத்து விட்டு, சிலையை வெளியே எடுத்து 48 நாட்கள் பக்தர்களின் தரிசனத்திற்கு வைப்பார். கடந்த 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற அத்திவரதர் தரிசன விழாவிற்கு பின்னர் நடப்பு ஆண்டில் விழா நடைபெற உள்ளது.
இதற்காக அனந்தசரஸ் குளத்தில் இருந்து நீரை வெளியேற்றி, அத்திவரதர் சிலையை நள்ளிரவு 1 மணிக்கு வெளியே எடுத்துள்ளனர். தைல சாம்பிராணி கொண்டும், மூலிகைகளை கொண்டு சிலையை சுத்தம் செய்து, விசேச பூஜைகள் செய்துள்ளனர்.
13 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்ட அத்திவரதர் சிலை வருகிற 1-ஆம் தேதி காலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் வைக்கப்படுகிறது.
ஆகஸ்டு மாதம் 17-ஆம் தேதி வரை தொடர்ந்து 48 நாட்கள் அத்திவரதரை பக்தர்கள் தரிசிக்கலாம். காலை 6 மணி முதல் பகல் ஒரு மணி வரையிலும், பின்னர் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசிக்கலாம். இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணிக்கு பின்னர் தரிசன அனுமதி கிடையாது. ஆனால் 8 மணிக்குள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தரிசிக்க அனுமதி அளிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
விழாவுக்காக தயாரிக்கப்பட்டுள்ள விசேச மேடையில் அத்திவரதர் சிலையை வைக்க உள்ளனர். சிலைக்கு கற்பூர ஆரத்தியோ, தீபாராதனையோ காட்டப்படாது. பூக்களால் அர்ச்சனை மட்டுமே செய்யப்படும். பட்டு சார்த்தி வழிபாடும் நடைபெறும்.
ஒன்றாம் தேதி முதல் 30 நாட்களுக்கு கிடந்த நிலையிலும், அடுத்த 18 நாட்களுக்கு நின்ற நிலையிலும் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.
அந்த அபூர்வ தரிசனத்தை பக்தர்கள் காண தமிழக அரசு விரிவான ஏற்பாடுகளை செய்து உள்ளது. இதில் உள்ளூர்,வெளியூர் என இருவகையான பக்தர்களும் தரிசிக்க தனி,தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் பக்தர்கள், வருகிற 1, 2, 3, ஆகிய நாட்களிலும், 12 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலும், ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரையிலும், பின்னர் ஆகஸ்டு 16, 17 ஆகிய தேதிகளிலும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை மட்டுமே தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
உள்ளூர் பக்தர்கள், தரிசனத்திற்காக டிக்கெட்டுகள் பெற காஞ்சிபுரத்தில் 8 இடங்களிலும், சிறுகாவேரிபாக்கம், கோவிந்தவாடி, திருப்பூங்குழி, சித்தியம் பாக்கம் ஆகிய ஊர்களிலும், மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வெளியூர் பக்தர்கள் தரிசிக்க தர்ம தரிசனம், 50 ரூபாய், 500 ரூபாய் என மூன்று விதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தர்ம தரிசனம் செய்வோர் கோவிலின் கிழக்கு கோபுரம் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள். கட்டண தரிசனம் செய்ய விரும்புவோர்,
http://www.kanchivaradarajartemple.com/home.html என்ற கோவிலின் இணைய தள முகவரியில் சென்று முன் பதிவு செய்யலாம்.
முன்பதிவு வசதி வருகிற 30-ஆம் தேதி காலை முதல் தொடங்குகிறது. அதில் பெயர், ஆதார் எண், ஆகியற்றை பதிவு செய்து, தேவையான கட்டணத்திற்கான ரூபாயை செலுத்தினால், பக்தர்கள் விரும்பும் தேதியில் தரிசனம் செய்ய இணையதளம் வழியே டிக்கெட் அளிக்கப்படும்.
கிழக்கு கோபுரம் வழியாக பக்தர்கள் கோவில் உள்ளே செல்வதற்கான வழி வகை செய்யப்பட்டுள்ளது. வயதான மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்பதற்காக தற்காலிக நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் உட்புறத்தில் உள்ள மாடவீதிகளில் நிரந்தர மேற்கூரை அமைக்கப்பட்டு உள்ளது.
அத்திவரதர் திருவிழாவிற்காக தமிழக அரசால் 29 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பல்வேறு துறைகளின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் முத்துப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில், வேலூர்,பெங்களூர் ஆர்க்காடு,அரக்கோணம்,திருத்தணி திருப்பதி மற்றும் வட மாநில பக்தர்கள் வரும் பேருந்து அல்லது வாகனங்களை நிறுத்தி விட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மினி பேருந்து மூலம் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோவிலுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓரிக்கையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில், உத்தரமேரூர்,மதுராந்தகம், திருவண்ணாமலை,சேலம், கோவை, ஈரோடு , திருச்சி , மதுரை, நெல்லை, குமரி உள்ளிட்ட ஊர்களில் இருந்து வருவோர் வாகனங்களை நிறுத்தி விட்டு, அரசு போக்குவரத்து மினி பேருந்து மூலமாக கோவிலுக்கு செல்லலாம்.
காஞ்சிபுரம் பெரியார் நகர் பச்சையப்பன் திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் சென்னை மற்றும் தாம்பரம் மகாபலிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட ஊர்களில் இருந்து வரக்கூடிய பக்தர்கள் அவர்களுடைய வாகனங்களை அங்கு நிறுத்திவிட்டு அரசு பேருந்து மூலமாக கோவிலுக்கு செல்லலாம்.
நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு லட்சம் பக்தர்கள் வருவார் என்று திட்டமிட்டு அதற்கு ஏற்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 2500 போலீசார் ஈடுபட உள்ளனர். மேலும் கோவிலை சுற்றிலும், நாலா பக்கத்திலும் நூறு மீட்டர் இடைவெளியில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் வருகிற 1-ஆம் தேதி அன்று காஞ்சிபுரத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதோடு, ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 17-ஆம் தேதி வரை காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். உள்ளூர்வாசிகளின் வாகனங்களுக்கு தனி அனுமதி சீட்டு வழங்கப்பட்டு உள்ளது.
இந்த சீட்டு பெற்ற வாகனங்கள் மட்டுமே விழா நடைபெறும் 48 நாட்களில் காஞ்சிபுரத்திற்குள் செல்ல அனுமதி அளிக்கப்படும். வெளியூர் வாகனங்கள் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு அருகில் வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
மக்களுக்கு அன்னதானம் வழங்குபவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்ற பிறகுதான் தரமான உணவுகளை வழங்க வேண்டும் என்றும், அனுமதியில்லாமல் அன்னதானம் வழங்கினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்பதால் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் பக்தர்கள் வசதிக்காக 100 தற்காலிக கழிவறைகள் 30 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
மேலும் கோவில் உட்பிரகாரத்தில் நான்கு ஆம்புலன்ஸ்களும்,கிழக்கு மற்றும் மேற்கு கோபுரங்களுக்கு அருகில் தற்காலிக சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
விழா நடைபெறும் 48 நாட்களுக்கு 4 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
