உச்சநீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட 4 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்க உள்ளனர்.
உச்சநீதிமன்ற பதவிகளுக்கு இமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ராமசுப்பிரமணியன், பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள கிருஷ்ண முராரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ரவீந்திர பட் மற்றும் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆகியோரின் பெயர்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.
இந்த நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து நான்கு பேரும் உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகளாக இன்று பதவி ஏற்கின்றனர். அவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த பானுமதி உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ள நிலையில் தற்போது ராமசுப்பிரமணியன் பதவி ஏற்பதை அடுத்து உச்சநீதிமன்றத்தில் தமிழக நீதிபதிகளின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.
