ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத் தடையை மீறி சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக ஈரான் நாட்டு மிகப் பெரிய எண்ணெய் கப்பலான வி எல் சி சி கிரேஸ் 1 என்ற கப்பலை ஜிப்ரால்டர் நீரிணையில் இங்கிலாந்து கடற்படையினர் கடந்த மாதம் 4ம் தேதி சிறைப்பிடித்தனர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஹோர்முஸ் நீரிணையில் சென்று கொண்டிருந்த இங்கிலாந்து எண்ணெய் கப்பலான ஸ்டெனா இம்பெராவை ஈரான் சிறைபிடித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடும் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் இந்தக் கப்பலை விடுவிக்கக் கோரி ஜிப்ரால்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கிரேஸ் 1 கப்பலை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஜிப்ரால்டர் பகுதி நீதிபதி அண்டனி டுட்லீ உத்தரவிட்டார். இதையடுத்து அந்தக் கப்பலில் இருந்த 24 இந்தியர்களை விடுவிக்க மத்திய அரசு கடும் முயற்சிகள் மேற்கொண்டது.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் கூறும்போது, இந்திய மாலுமிகளை விடுவிப்பது தொடர்பாக இங்கிலாந்து வெளியுறவுத் துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன் முயற்சியாக 24 மாலுமிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக ஈரான் சிறைப்பிடித்திருந்த ஸ்டெனா இம்பெரா கப்பலில் இருந்த இந்தியர்களை அந்நாடு விடுவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
