காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் காயம் அடைந்தார்.
குப்வாரா மாவட்டம் ஹண்ட்வாரா நகர் அருகே தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் பாபாகுண்ட் (Babagund) கனு (Khanu) ஹாம்லெட் (Hamlet) உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு 9 மணி முதல் ராணுவத்தின் இரு பிரிவுகள், சி.ஆர்.பி.எஃப்., சிறப்பு அதிரடிப் படையினர் இணைந்து தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.
இருளில் தீவிரவாதிகள் தப்பிச் சென்றுவிடாமல் இருக்க பிரகாசமான விளக்குகளையும் அமைத்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் பாபா குண்ட் கிராமத்தில் ஒரு இடத்தில் பதுங்கியிருந்த சில தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும், கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் பாரமுல்லா மாவட்டத்துக்குட்பட்ட உரி (Uri) செக்டாருக்குட்பட்ட கவஹலன் (Gawahalan), சோக்கஸ் (Chokas), கிகெர் (Kiker), கதி (kathi) உள்ளிட்ட இடங்களில் இந்திய ராணுவ நிலைகள் மீதும் எல்லையோர கிராமங்கள் மீதும் பாகிஸ்தான் படைகள் விடிய விடிய தாக்குதல் நடத்தியதில், இந்திய வீரர்கள் அவர்களுக்கு உரிய பதிலடி கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்த எல்லையோர கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
