புதுடில்லி : அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ இன்று(ஜூன் 25) இந்தியா வருகிறார். இதில் அமெரிக்காவிடமிருந்து 114 போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் போட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தொழில்துறை பாதுகாப்பு ஒப்பந்தம் : இரு நாடுகளும் தங்கள் தொழில்நுட்பங்களை பரிமாறிக்கொள்ள வகை செய்யும், தொழிற்துறை பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் இருநாடுகளும் இறுதிசெய்யலாம் என்றும் தெரிகிறது.போர் விமானங்களை இந்தியாவில் தயாரித்தல் உள்ளிட்ட கூட்டு முயற்சிகளுக்காக, அமெரிக்காவிடமிருந்து தொழில்நுட்பங்களை வாங்கவும் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 114 போர் விமானங்கள் : இதில், மிக்-21 ரக ஜெட் விமானங்களை பதிலாக, இந்திய விமானப்படைக்கு 114 போர் விமானங்களை வழங்கும் 15 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட உள்ளது. லாக்ஹீட் மார்ட்டின், போயிங் ; இந்த ஒப்பந்தத்தை பெற லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் போயிங் ஆகிய இரு அமெரிக்க நிறுவனங்களும் கடும் போட்டியில் உள்ளன. பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், இந்த விமானங்களை இந்தியாவிலேயே தயாரித்து வழங்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. பாம்பியோ, பிரதமர் சந்திப்பு இன்று (ஜூன் 25) இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பிரதமர் மோடியையும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரையும் நாளை சந்தித்துப் பேச உள்ளார். அப்போது தொழில்துறை பாதுகாப்பு இணைப்பு ஒப்பந்தம் குறித்தும் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
