மும்பையில், வெர்சோவா-பாந்த்ரா((Versova-Bandra)) கடல் வழிச்சாலை இணைப்புத் திட்டத்தை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ரா நிறுவனம், குறிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் முடிக்காவிட்டால், நடவடிக்கை பாயும் என, மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டு கழகம் எச்சரித்திருக்கிறது.
MSRDC என சுருங்க அழைக்கப்படும் இக்கழகத்திடம் இருந்து, 7,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்ட ஒப்பந்தத்தை அனில் அம்பானி நிறுவனம் பெற்றது.
இதன் மொத்த நீளம் 17 புள்ளி 17 கிலோமீட்டர் ஆகும். வெர்சோவா-பாந்த்ரா கடல் வழிச்சாலை இணைப்பு திட்டத்தின் மூலம் மும்பை வாசிகளின் பயண நேரம் 90 நிமிடங்களிலிருந்து 10 நிமிடங்களாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் பாந்த்ரா-வொர்லி ((Bandra-Worli)) கடல் இணைப்பின் நீளத்தை விட மூன்று மடங்கு நீளமாகும். இத்தாலிய கட்டுமான நிறுவனமான அஸ்டால்டி((Astaldi)) இத்திட்டத்தில் முக்கிய பங்குதாரர் ஆகும்.
ஒப்பந்தத்திற்கு இணங்க, கடந்த ஜூன் 24 தேதியிலிருந்து 60 மாதங்களில் திட்டத்தை முடித்துக் கொடுப்பதாக ரிலையன்ஸ் இன்ஃபிரா உறுதியளித்துள்ளது.
இந்நிலையில், அனில் அம்பானியின் நிறுவனம் பெருங்கடனில் தத்தளிப்பதன் எதிரொலியாக, மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டு கழகம் புதிய அறிவுறுத்தலை வழங்கியிருக்கிறது.
ஒவ்வொரு 6 மாதங்களுக்கும், அதற்குரிய திட்டப் பணிகள் முடிக்கப்படாவிட்டால், தண்டம் விதிக்கப்படும் என்றும், தேவைப்பட்டால், ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றும், அனில் அம்பானியின் இன்ஃபிரா நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
