நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் தலைமையில் இன்று நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற பின்னர், அடுத்த ஐந்தாண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை வரையறுக்கும் மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு மாற்றாக நிதி ஆயோக் என்னும் பெயரில் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் ஐந்தாவது கூட்டம் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெறுகிறது.
இன்றைய கூட்டத்தில் மழை நீர் சேகரிப்பு, வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் நிலை, வேளாண் சீரமைப்புகள், விவசாயிகளின் வருவாயை பெருக்குதல், நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன
அனைத்து மாநில முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இதில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னையிலிருந்து, டெல்லிக்கு விமானம் மூலம் நேற்று பயணமானார். தலைநகர் டெல்லி வந்தடைந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அதிமுக எம்.பிக்கள் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
நிதி ஆயோக் பயனற்ற கூட்டம் என்று கூறி புறக்கணிக்கப் போவதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஏற்கனவே அறிவித்து விட்டார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவும் பங்கேற்கப் போவதில்லை என்று கூறப்படுகிறது. மாநிலப் பிரச்சினைகள் குறித்து பிரதமருடன் நேரில் விவாதிக்க அவர் நேரம் கோரியபோது, அதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என்பதால் டெல்லி செல்லவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
