சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கங்களை தடுக்கத் தவறிய வழக்கில் மேகாலயா அரசு, 100 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த மாநிலத்தின் கிழக்கு சைந்திய மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆற்று வெள்ளம் புகுந்ததில், தொழிலாளர்கள் 15 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து சட்டவிரோத சுரங்கங்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது.
அந்தக் குழு தாக்கல் செய்த அறிக்கையில், அம்மாநிலத்தில் செயல்படும் 24 ஆயிரம் சுரங்கங்களில் பெரும்பாலானவை சட்டவிரோதமானவை என்று கூறப்பட்டது. விசாரணையின் போது, சட்டவிரோத சுரங்கங்கள் இருப்பதை மாநில அரசும் ஒப்புக் கொண்டது. இதை அடுத்து மேகாலயா அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
இதை எதிர்த்து அந்த மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அசோக் பூஷண், கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு, பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு செல்லும் என்றும், 100 கோடி ரூபாய் அபராதத்தை மேகாலயா அரசு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
மேலும் சட்டவிரோதமாக அள்ளப்பட்ட நிலக்கரியை, இந்திய நிலக்கரி சுரங்க ஆணையத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த நிலக்கரியை ஏலம் விட்டு, அதில் வரும் பணத்தை மேகாலயா மாநில அரசுக்கு நிலக்கரி சுரங்க ஆணையம் செலுத்தும் என்றும் கட்டளை இட்டனர். மேலும் உரிய அலுவலகத்தில் உரிமம் பெற்று நிலக்கரி சுரங்கங்கள் இயங்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
