தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரும் 28-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைப்பெற்று வருகிறது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி 2019 -20ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மக்களவைத் தேர்தல் நெருங்கியதால், பட்ஜெட் மீதான விவாதத்துக்குப் பிறகு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமலேயே பேரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.
தேர்தல் முடிந்த நிலையில், துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் பெறுவதற்காக, சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்று வருகிறது. அதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில், குடிநீர் பிரச்சனை, சட்டமன்ற கூட்டத் தொடரை எதிர்கொள்வது, துறை வாரியாக முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுவதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களில், தொழில் தொடங்க தயார் நிலையில் உள்ள நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு, மற்ற சலுகைகள் அளிப்பதற்கான ஒப்புதல் ஆகியவை குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து பிற்பகலில் பேரவைத் தலைவர் தனபால் தலைமையில், சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடக்க உள்ளது. அதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், திமுக, காங்கிரஸ் கட்சிகளின் கொறடாக்கள் பங்கேற்கவுள்ளனர். அதில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது, எந்தெந்த துறை மானியக் கோரிக்கைகளை எந்த நாளில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது, கட்சிகளின் உறுப்பினர்கள் பேசும் நேரம், கவன ஈர்ப்பு, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கூட்டத்தின் முடிவில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதையும், கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலையும் பேரவைத் தலைவர் அறிவிப்பார் என கூறப்பட்டுள்ளது.
