2018 இந்தியாவிற்கு சிறப்பான ஆண்டாக அமைந்ததாக பிரதமர் மோடி மன் கி பாத் உரையில் கூறினார்.
 உலகிலேயே மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் துவங்கப்பட்டது, இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் 140 அடி உயரமுள்ள திருவுருவச் சிலை நிறுவப்பட்டது, ஐ நா சபையின் புவிக்காவலர் விருது இந்தியாவிற்குக் கிடைத்தது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை நடப்பாண்டில் இந்தியா படைத்துள்ளதாகப் பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார். அகில இந்திய வானொலியில் மன் கி பாத் மனதின் குரல் நிகழ்ச்சியில் 51 ஆவது முறையாக இன்று உரையாற்றிய அவர், பாதுகாப்புத் துறையில் முப்படைகளுக்கும் அணு ஆயுதங்கள் வழங்கப்பட்டு இந்தியா அணு ஆயுத முப்பரிமாணத்தை எட்டியுள்ளதாகக் கூறினார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் ஏராளமான பதக்கங்களை வென்றதையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற திட்டங்களில் ஏராளமான இளைஞர்கள் இணைந்து தொழில் முனைவோராக உருவாகி வருவதற்குப் பாராட்டு தெரிவித்த பிரதமர், இவர்களது சாதனைகளை இணையதளம் மூலம் அனைவரும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இம்மாதம் சென்னையில் உயிரிழந்த மக்கள் மருத்துவர் டாக்டர் ஜெயச்சந்திரன் மருத்துவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்ததாக நினைவு கூர்ந்தார். டாக்டர் ஜெயச்சந்திரன் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க மிகக் குறைந்த கட்டணமே வசூலித்ததாகப் பிரதமர் கூறினார்.
நம் நாட்டுக் கலாச்சாரத்தோடு இணைந்த பல்வேறு விழாக்கள், சமூகப் பொறுப்பையும் மதிப்பையும் உணர்த்துவதோடு ஒருங்கிணைந்த சகோதரத்துவத்துடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டுவதாகப் பிரதமர் கூறினார். அனைத்து விழாக்களும் வேற்றுமையில் ஒற்றுமையையும் ஒரே இந்தியா- வலுவான இந்தியா என்ற தத்துவத்தையும் உலகுக்கு எடுத்துரைப்பதாகத் தெரிவித்தார். ஒவ்வொரு மாநிலத்திலும் கொண்டாடப்படும் விழாக்கள் குறித்த புகைப்படங்களை இணைய தளங்களில் பகிர்ந்து கொள்வதன் மூலம் விழாக்கள் குறித்த தகவல்கள் அனைவரையும் சென்றடையும் என்றார். கும்ப மேளா விழாவிற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை எடுத்துரைத்த பிரதமர், மேளாவின் போது தூய்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறினார். தேசப்பற்று மற்றும் ஒருங்கிணைப்பிற்குக் கும்ப மேளா வழிவகை செய்யும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
தேசிய உணவுப் பாதுகாப்பு ஆணையத்தின் ஆரோக்கிய பாரதம் நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருவதாகவும் பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு இந்நிகழ்ச்சிகள் மூலம் சரியான உணவு உட்கொள்ளுதல் குறித்த தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். அடுத்த ஆண்டு குடியரசு தினம் மற்றும் தேசப்பிதா காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படுவதை மக்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார்.
