இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கடந்த நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் 5 புள்ளி 8 சதவீதமாக குறைந்ததால் சீனாவை விட வளர்ச்சியில் பின்தங்க நேரிட்டது.
5 ஆண்டுகளில் இல்லாத விதத்தில் 2018 – 2019 நிதி ஆண்டில் ஜிடிபி வளர்ச்சி 6 புள்ளி 8 சதவீதமாக சரிந்தது. இதையடுத்து பொருளாதார வளர்ச்சியை 5 லட்சம் கோடி அமெரிக்க டாலராக அதிகரிக்கும் விதத்தில் செயல்பட வேண்டும் என்று அனைத்து அமைச்சகத்தின் செயலாளர்களிடம் இம்மாத தொடக்கத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்.
அடுத்த மாதம் 5 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் சூழலில், முன்னணி பொருளாதார மற்றும் நிதி நிபுணர்களை சந்தித்து பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனை நடத்தி வருகிறது. டெல்லியில் உள்ள நிதி ஆயோக் அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கான திட்டங்கள்,வேலைவாய்ப்பை உருவாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சவால்கள் உள்ளிட்டவைகளை நிபுணர்கள் பிரதமரிடம் விளக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதி அயோக் அமைப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
