மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்த எதிர்க்கட்சியினர் பங்கேற்ற பேரணியில் கலந்து கொண்ட சத்ருஹன் சின்ஹா பாஜகவில் இருந்து நீக்கப்படுவார் என கூறப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நேற்று முன் தினம் பொதுக் கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், பாருக் அப்துல்லா, சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கேஜரிவால், அபிஷேக் சிங்வி, பாஜக அதிருப்தி எம்பியான சத்ருஹன் சின்ஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ரஃபேல் ஊழல் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அதை மறக்கடிக்கப்பதற்கு தான் பாஜக தலைவர்கள் ராமர் கோயில் விவகாரத்தை பேசி வருகின்றனர் என கூட்டத்தில் முன்மொழியப்பட்டது.
சத்ருஹன் சின்ஹா இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான பொதுக் கூட்டம் தான் தற்போது கொல்கத்தாவில் நடந்து வருகிறது என்றார். அத்துடன் ரபேல் விமான ஒப்பந்தம் எச்ஏஎல்லிடம் கொடுக்காமல் 11 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட அனில் அம்பானி நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும் டுவிட்டரிலும் பாஜகவுக்கு எதிரான கருத்தையே சத்ருஹன் சின்ஹா தெரிவித்தார்.
சத்ருஹன் சின்ஹா மம்தா கூட்டத்துக்கு சென்றதோடு மத்திய அரசை தாக்கி பேசியுள்ளது பாஜகவினரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
இதனையடுத்து, கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்த சத்ருஹன் சின்ஹாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்பார் என்றும் அதை தொடர்ந்து அவரை கட்சியிலிருந்து நீக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
