மோகன் ரங்காச்சாரி என்ற இயற்பெயர் கொண்ட கிரேஸி மோகன், அடிப்படையில் மெக்கானிக் எஞ்சினியரிங் படித்தவர். கல்லூரிக் காலங்களில் சின்ன சின்ன நாடகங்களைப் நடத்தியவருக்கு நல்ல வேலை கிடைத்தும், அதில் மனம் லயிக்காமல் சபாக்களில் நாடகங்கள் போட ஆரம்பித்தார். கிரேஸி கிரியேசன்ஸ் என்ற பெயரில் தனது சகோதரர் மாது பாலாஜியுடன் இணைந்து, சுமார் 3000க்கும் மேற்பட்ட நாடகங்களை நிகழ்த்தியிருக்கிறார் கிரேஸி மோகன். அவற்றில் பல தூர்தர்சன் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி இருக்கின்றன.
முதன் முதலில் தனது ‘பொய்க்கால் குதிரைகள்’ படத்துக்கு வசனம் எழுத வைத்தவர் இயக்குநர் பாலசந்தர்.
பின்னர் கமலுடன் ‘சதி லீலாவதி’ படத்தில் வசனகர்த்தாவாகப் பணியாற்ற ஆரம்பித்த கிரேஸி மோகன் அடுத்து அவருடன் தொடர்ந்து ’காதலா காதலா’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ’அபூர்வ சகோதர்கள்’, ’இந்தியன்’, ’அவ்வை சண்முகி’, ’தெனாலி’, ’பஞ்ச தந்திரம்’ உட்பட பல படங்களில் பணியாற்றினார்.
வசனகர்த்தாவாகப் பணியாற்றிய அதே சமயம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்பட சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும் தோன்றியிருக்கிறார். தனது டைமிங் காமெடியால் மக்களை சிரிக்க வைத்தவர் கிரேஸி மோகன்.
மாரடைப்பு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிரேசி மோகன் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி பிற்பகல் 2 மணிக்கு கிரேஸி மோகன் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
கிரேசி மோகன் மறைந்ததை அறிந்ததும், நடிகர்கள் கமல்ஹாசன், எஸ்வி சேகர் உள்ளிட்ட பலர் மருத்துவமனைக்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.
கிரேசி மோகன் ஒரு நகைச்சுவை ஞானி என புகழாரம் சூட்டியுள்ள கமல், கிரேஸி என்பது அவருக்கு பொருந்தாத பட்டம் என்று தான் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கிரேஸி மோகனின் நகைச்சுவை அவரது ரசிகர்கள் மூலம் வாழும் என்றும், அந்த வாழ்விற்கு தானும் துணை நிற்பேன் என்றும் கமல் கூறியுள்ளார்.
