துபாயில் இருந்து மதுரைக்கு 23 துப்பாக்கிகளைக் கடத்திக் கொண்டு வந்த 3 பேரை, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 22ஆம் தேதி அன்று துபாயில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் மதுரை விமான நிலையத்தை வந்தடைந்தது. அந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகள், மெட்டல் டிடெக்டர் கருவியை கடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது குறிப்பிட்ட 3 பேர் கடந்து சென்ற போது அந்தக் கருவி எச்சரிக்கை ஒலி எழுப்பியது.
இதை அடுத்து, அஜ்மல் கான், காலிக் முகமது, முனீஸ்ப்பு என்ற அந்த மூன்று பயணிகளைப் பிடித்த விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களது உடைமைகளை சோதனையிட்டனர்.
சோதனையில், அவர்களது உடைமையில் இருந்து 23 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 23 துப்பாக்கிகளும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டது உறுதி செய்யப்பட்டது. ஆனால், 23 துப்பாக்கிகளும் இந்திய துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மூவரும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அவர்கள் சொல்வது உண்மையா என்பது தொடர்பாக கடந்த 2 நாட்களாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால், எந்த ஒரு துப்பாக்கி சுடும் கழகங்களிலும் துப்பாக்கிகள் பதிவு செய்யப்படவில்லை என கண்டுபிடிக்கப்படவே, அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், மூன்று பேரையும் கைது செய்தனர். துபாய் விமான நிலையத்தில் போலி ஆவணங்களைக் காட்டி அவர்கள் துப்பாக்கிகளைக் கடத்திக் கொண்டு வந்ததையும் அதிகாரிகள் உறுதி செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த துப்பாக்கிகளின் மொத்த மதிப்பு 17 லட்சத்து ஆயிரத்து 87 ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த துப்பாக்கிகள் எந்த ரகத்தைச் சேர்ந்தவை, எதற்காக கடத்திக் கொண்டு வரப்பட்டன என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
