சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்களுக்கானது என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமைதியை சீர்குலைக்கும் நோக்குடன் கோயிலுக்கு வருபவர்களை மாநில அரசு அடையாளம் காண வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து, பதற்றம் நிலவிவருகிறது. தீவிர போராட்டத்துக்கு இடையே, 50 வயதுக்குட்பட்ட 2 பெண்கள் வழிபாடு நடத்தினர்.
இந்நிலையில், சபரிமலை பாதுகாப்பு தொடர்பான மனுக்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சபரிமலை ஐயப்பன் கோயில் என்பது பக்தர்களுக்கானது என்று குறிப்பிட்டனர்.
செயற்பாட்டாளர்களை தனியார் வாகனத்தில் போலீஸார் அனுமதித்தது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அவர்கள் இரண்டு பேரின் நோக்கத்தை கண்டறிய வேண்டும் என்று மாநில அரசுக்கு அறிவுறுத்தினர்.
அமைதியை சீர்குலைக்கும் நோக்குடன் வருபவர்களை மாநில அரசு அடையாளம் காண வேண்டும் என்றும், இல்லாவிட்டால், வெளி அமைப்புகளை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.
