ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்க முயன்ற குற்றச்சாட்டில், கோவையில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் கடந்த புதன்கிழமை 7 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பரப்பி ஆள்சேர்க்க முயற்சி என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்த என்ஐஏ, அதில் அசாரூதீன் என்ற நபரை மட்டும் அன்றைய தினமே கைது செய்தது. மற்ற 5 பேரும் என்ஐஏ விசாரணை வளையத்தில் உள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட 6 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கோவையை சேர்ந்த முகமது உசேன், ஷாஜகான், சபியுல்லா ஆகிய 3 பேரின் வீடுகளில் கோவை மாநகர காவல் துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அவர்களிடம் 2 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையில், ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் சேர்க்க முயற்சி செய்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மூவரையும் நேற்று கைது செய்தனர்.
இந்த 3 பேர் மீதும் கடந்த 12 ம் தேதியே சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் ((UAPA)) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மூன்று பேரும் கோவை மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் வீட்டில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டனர். அவர்கள் 3 பேரையும் வரும் 28ம் தேதி வரை காவலில் அடைக்க நீதிபதி உத்திரவிட்டார். இதையடுத்து 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
