ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ‘மைக்ரோசாட்-ஆர்’, ‘கலாம் சாட்’ ஆகிய 2 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது.
பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஒ பயன்பாட்டிற்காக 690 கிலோ எடைகொண்ட மைக்ரோசாட்-ஆர் என்ற செயற்கைக் கோள் இன்று இரவு 11.37 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி44 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.34 கிராம் எடையில் ‘கலாம்சாட்’ என்ற மாணவர்கள் தயாரித்த செயற்கைக்கோளும் இதனுடன் செலுத்தப்பட உள்ளது.
இதற்கான 28 மணி நேர கவுண்ட் டவுன் நேற்றிரவு 7.37 மணிக்குத் தொடங்கியது. ராக்கெட்டை செலுத்துவதற்கான இறுதிக் கட்டப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசித்த பிறகு இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: புதிய தொழில்நுட்பம் மூலமாக இரு செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
நடப்பாண்டில் சந்திரயான்-2 உள்பட 32 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார்.கடந்த 25 ஆண்டுகளில், இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மூலம் 53 இந்திய செயற்கை கோள்களும் மற்றும் 269 வெளிநாட்டு செயற்கை கோள்களும் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
