முன்னாள் சட்டத்துறை அமைச்சரான இசக்கி சுப்பையா, அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைய உள்ளார்.
அமமுக-வின் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளராக பதவி வகித்து வருபவர் இசக்கி சுப்பையா. அவர் இன்று நெல்லை மாவட்டம் பழைய குற்றாலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய இசக்கி சுப்பையா, டிடிவி தினகரன் பதற்றத்தில் இருப்பதாகக் கூறினார்.
தடுமாற்றத்துடன் அவர் பேசி வருவதாகவும் இசக்கி சுப்பையா தெரிவித்தார். தினகரனை அடையாளம் காட்டியதே தொண்டர்கள் தான் என்று கூறிய இசக்கி சுப்பையா, தனது ரகசியங்களை அவர் வெளியில் சொல்லி விட்டதாகவும், இது தலைவனுக்கு அழகா என்றும் வினவினார். வரும் 6ஆம் தேதி அன்று 20 ஆயிரம் தொண்டர்களுடன் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் முன்னிலையில் தென்காசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் அதிமுகவில் இணைய இருப்பதாகவும் இசக்கி சுப்பையா தெரிவித்தார்.
தனது மகனுக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும் அமமுக கட்சி அலுவலகத்தை காலி செய்வது குறித்து ஒப்பந்தப்படி முடிவெடுக்கப்படும் என்றார்.
